Thursday 26 April 2012

ஓதுவதொழியேல்



எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.ஒருவனுக்கு கல்விபோல் உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று பெரியவர்கள் உறுதியாய்க் கூறியிருக்கின்றனர்.தக்க கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம்,ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா மகாராணியார் அரசுபுரிந்த காலத்தில் ‘கிளாட்ஸ்டன்’என்னும் பிரபு பிரதான மந்திரியாக இருந்தார்.அவர் தனது வீட்டில் பெரிய புத்தகசாலை ஒன்று வைத்து தமக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளுக்கிடையில் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் இடைவிடாமல் படித்து வந்தார். என்னேரமாயினும் தினமும் இரவு இரண்டு மூன்று மணி நேரமாகிலும் படித்த பிறகே அவர் உறங்குவது வழக்கம்.அப்படி இடைவிடாமல் படித்து வந்த காரணத்தால் எல்லோரும் புகழும்படி ஒப்புயர்வில்லாத உன்னத நிலையை அடைந்தார். 

திருவள்ளுவரும்,வேதவியாசரும் இன்னும் இவர்களைப்போன்ற பலப்பல அறிஞர்களும்கூட கல்வியின் மேன்மையினால் யாவராலும் எக்காலத்திலும் கொண்டாடப்படும் பெருமை அடைந்து விளங்கினர்.

சிறிது கல்விகற்ற மாத்திரத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி அகந்தை கொண்டு திரிபவர் அறிவில்லாதவர்களே.அறிவுடையோர் மேலும் மேலும் கற்கும் ஆர்வம் கொண்டு எப்போதும் கற்பதை கை விடமாட்டார்கள்.

“பாடையேறினும் ஏடது கைவிடேல்”என்று இரு பொருள் தரும்படி நமது நாட்டில் வழங்கும் பழமொழி இதன் கருத்தை தெளிவாய்க்காட்டும்.கலைமகளும் இன்னும் கல்வி கற்பதாகக்கூறும் கருத்தும் இது பற்றியேதான்.

ஆதலால் கிடைத்த அவகாசங்களிலெல்லாம் தொடர்ந்து படிக்கவேண்டும்.

No comments:

Post a Comment